"பட்டியல் இன மக்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகக் கூறிக் கொள்ளும் தமிழக அரசால், அத்திட்டங்கள் எப்படி பயன்படுத்தப்பட்டது. எவ்வளவு பேர் பயன் பெற்றனர் போன்ற புள்ளி விவரங்களைத் தர முடியவில்லை. அரசு ஊழியர்களில் பட்டியல் இன மக்கள் எத்தனை பேர், எத்தனை பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது, காலியிடங்கள் எத்தனை, பள்ளி, கல்லூரிகளில் என்ன நிலை என்ற விவரங்களும் மாவட்ட வாரியாகவோ, துறை ரீதியாகவோ இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் பணியாளர் சங்கம் மற்றும் அரசுக்குமிடையே கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் தொடர்பு அதிகாரி இருப்பார். அது போன்று அதிகாரி இங்கு இல்லாததால், தகவல் பரிமாற்றம் சரியாக இல்லை என்று கருதுகிறேன். பிற மக்கள் ஆக்கிரமித்துள்ள இடங்கள் தான் பல இடங்களில் பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்பது தொடர்பாக 8 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன." - இப்படிக் கூறியது கூலி வேலையை பிழைப்பாகக் கொண்ட குப்பனோ, சுப்பனோ அல்ல. பட்டியல் இனமக்களுக்கான நலத்துறையின் துணைத்தலைவரான திரு.காம்ளே அவர்களே, கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசின் மீதான குற்றச்சாட்டு தான் மேற்கூறியது.
1982ம் ஆண்டு லண்டன் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் பட்டியல் இனமக்களுக்கு வழங்கப்பட்ட 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தில், தமிழக அரசின் நில நிர்வாகத்துறை ஆணையர் வெளியிட்ட ஆவணங்கள் கூறியுள்ளதன் அடிப்படையில் தற்போது வெறும் 1 லட்சத்து 26 ஆயிரத்து 111 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. மீதமுள்ள 10 லட்சத்து 73 ஆயிரத்து 887 ஏக்கர் நிலம் எங்கே போனது? என்ன ஆனது? தற்போது ஐந்தாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த தலித்களின் சம்பந்தி இந்த விஷயத்தில் இது வரை எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டது என்றால் மட்டுமே விசாரணைக்கமிஷன் அமைப்பாரோ இந்த தலித்களின் சம்பந்தி? மேலும், இந்த தலித்களின் சம்பந்தியின் ஆட்சியில் தான், வேலியே பயிரை மேய்ந்தது போல, பஞ்சமி நிலங்களை ஆர்ஜிதம் செய்யக்கூடாது என்ற விதியை மீறி அரசே பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமித்துள்ளது. அது சரி, ஆட்சி அதிகாரம் நம் கைகளில் வரும் வரை, இதை விதியென்று நொந்து கொள்வதைத் தவிர நம்மால் வேறென்ன செய்ய முடியும்.
குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தின் படி, மாநில முதல்வரை தலைவராகக் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் வன்கொடுமை வழக்குகளை விசாரிப்பதற்கென்றே தனியாக ஒரு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற நிலையில், தலித்களின் சம்பந்தியான கருணாநிதி ஆட்சி புரியும் தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் மட்டுமே தனியாக நீதிமன்றங்கள் அமைந்துள்ளன என்ற விஷயம் எப்படி அவருக்கு தெரியாமல் போனது. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் பெயரைச் சொல்லி, ஒடுக்கப்பட்ட மக்களின் ஓட்டுகளை பெற்று ஆட்சிக்கு வந்து, தன்னை பெரியாரின் பிள்ளை என்றும், அண்ணாவின் தம்பி என்றும் கூறிக் கொள்ளும் இந்த தலித் சம்பந்தியின் ஆட்சியில் தான், வன்கொடுமை நிகழ்வுகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் ஐந்தாவது இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் தான், "வன்கொடுமை வழக்குகளில், தண்டனை விகிதம் மிகக் குறைவாக உள்ளது. தமிழகத்தில் இதற்கென சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்" என்ற பட்டியல் இனமக்களுக்கான நலத்துறையின் துணைத்தலைவரான திரு.காம்ளே அவர்களின் வேண்டுகோளும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே கருணாநிதி காதில் விழுந்திருக்கிறது. மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற வேண்டுகோளை கனிவோடு பரிசீலிக்கும் கருணாநிதிக்கு, திரு. காம்ளே அவர்களின் வேண்டுகோள் மட்டும் எட்டிக்காயாய் கசப்பது ஏனோ? கம்யூனிஸ்டுகள் குற்றச்சாட்டுக்களுக்கு மேற்குவங்காளம், கேரளா போன்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு உடனடியாக புள்ளி விவரங்களை இந்த "தலித் சம்பந்தியான" கருணாநிதி, திரு.காம்ளே அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை அளித்த பதில் என்ன? தேவேந்திர விரோதப் போக்கு என்பது தானே திராவிடக் கட்சிகளின் இது நாள் வரை கொள்கையாக இருந்து வருகிறது. அ.தி.மு.க தேவேந்திர மக்களுக்கு எதிரி என்றால், தி.மு.க-வின் கருணாநிதி எம் இன மக்களின் துரோகி என்ற வித்தியாசத்தை தவிர வேறொன்றுமில்லை.
பட்டியல் இன மக்களிடையே பகையை உண்டாக்கவும், தேவேந்திர மக்களின் வேலை வாய்ப்புகளை பறிக்கும் விதமாகவும் தானே அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை, பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பெயர் பெற்ற கருணாநிதி தற்போது எடுத்திருக்கிறார். இது தி.மு.க கரை வேட்டி அணிந்த எத்தனை தேவேந்திர கைத்தடிக்களுக்குத் தெரியும்? ஐம்பதாயிரம் மக்களுக்கும் குறைவான கருணாநிதியின் சமூகம் இன்று ஆண்டு கொண்டு, எண்ணிக்கையில் கோடியைத் தொடும் எம் இனமக்களை அடிமைப்படுத்தி, தேவேந்திர விரோதப்போக்கையே தொடர்ந்து கடைபிடித்து வருகிறது என்று சொன்னால் அதற்கு தி.மு.க-விற்கு வாக்களிக்கும் தேவேந்திர மக்களின் பங்கும் அதில் இருக்கிறது என்பது தானே உண்மை. எட்டு சகவிகத ஓட்டுகளைக் கொண்ட விஜயகாந்த் ஆட்சி அமைக்க முயற்சிக்கும் போது, ஏறத்தாழ இருபது சகவிகித மக்கள் தொகையைக் கொண்ட தேவேந்திர இனம் இன்றளவும் ஆட்சி அமைக்க முடியாமல் போவதற்கு, எம் இனச் சொந்தங்கள் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் தொடர்ந்து வாக்களிப்பது தானே காரணமாக இருக்க முடியும்.
தி.மு.க-வின் தேவேந்திர விரோதப் போக்கின் மற்றொரு அடையாளமாக தூத்துக்குடியின் திரு.முருகன் அவர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்ட போது அனைத்து கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தி அரசியலாக்கி ஆதாயம் தேட முயற்சித்த நிலையில், உத்திரப்பிரதேசத்தின் பகுஜன் சமாஜ் கட்சியின் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் திரு.பிரமோத் குரில் அவர்கள் நேரில் வந்து துக்கத்தில் பங்கெடுத்து திருமதி.செல்விக்கு ஆறுதல் கூறியது திரு.பிரமோத் குரில் உட்பட நாம் அனைவரும் அம்பேத்கரின் மக்கள் என்ற அடிப்படையில் தானே. உயர்நிலைப் பதவியில் உள்ள திரு.உமாசங்கர் அவர்களே தேவேந்திரர் என்ற காரணத்தால் திராவிடக் கட்சியான தி.மு.க-வால் பழிவாங்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து , பகுஜன் சமாஜ் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பத் தயாரானதும், திரு.உமாசங்கர் அவர்களும் அம்பேத்கரின் மக்கள் என்ற அடையாளத்தைக் கொண்டவர் என்ற அடிப்படையில் தான். இனத்தின் பெயரைச் சொல்லி வாக்கு வாங்கி தேர்தலில் வெற்றி பெற்ற திராவிடக் கட்சிகளின் எத்தனை தேவேந்திர குல சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.உமாசங்கர் அவர்களின் பணியிடை நீக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்தனர்? அவர்களில் எத்தனை பேர் திருமதி.செல்விக்கு ஆறுதல் கூறவாவது தூத்துக்குடிக்கு வந்தனர்? இதை திராவிடக் கட்சிகளுக்கு வாக்களிக்கும் தேவேந்திர சொந்தங்கள் தான் சிந்திக்க வேண்டும். சிந்திப்பார்களா?
தேவேந்திர முன்னேற்ற முன்னணி (DMM), தேவேந்திர அறிவுசார் குழுமமான (DEED) மற்றும் அகில இந்திய மள்ளர் தொழில் மற்றும் வர்த்தக அமைப்பு ஆகியவற்றின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 10-10-2010 அன்று மதுரையில் உள்ள டீநோபில் மையத்தில் நடைபெற்றது. இதில் தேவேந்திர முன்னேற்ற முன்னணியின் நிறுவனரும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில முதன்மைச் செயலாளர் திரு. இ.பா.ஜீவன்குமார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேவேந்திர அறிவுசார் குழுமத்தின் தலைவர் திரு. சீனிவாசன், இயக்குனர் திரு. தங்கராஜ், பொருளாலர் திரு. நாகராஜ் ஆகியோர்களும், தேவேந்திர முன்னேற்ற முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் திரு. அரங்கராஜன், மாநிலச் செயலாளர் திரு. மணிவண்ணன் ஆகியோரும், கில இந்திய மள்ளர் தொழில் மற்றும் வர்த்தக அமைப்பின் நிர்வாக இயக்குனர் திரு. புகழேந்தி அவர்களும் மற்றும் மாநிலம் முழுவதும் இருந்து வந்த கல்வியாளர்களும், தொழிலதிபர்களும், தேவேந்திர முன்னேற்ற முன்னணியின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
தேவேந்திர அறிவுசார் குழுமத்தின் பொருளாலரான திரு. நாகராஜன் அவர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டியவற்றைப் பற்றி விளக்கினார். இதைத் தொடர்ந்து திரு. ஜீவன்குமார் அவர்கள் தேவேந்திர முன்னேற்ற முன்னணி மேற்கொண்ட களப்பணிகளை பட்டியலிட்டதோடு, அது தேவேந்திர மக்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தையும், பெற்ற வரவேற்பையும் புகைப்படங்களோடு விவரித்தார். மேலும் தேவேந்திர விரோதப் போக்கை தொடர்ந்து கடைபிடித்து வரும் தி.மு.க அரசின் முதல்வர் கருணாநிதி அவர்களால் திரு. உமாசங்கர் ஐ.ஏ.எஸ் பழிவாங்கப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி மதுரை உட்பட பல்வேறு இடங்களில் நடத்திய போராட்டங்களையும், கருணாநிதியின் தேவேந்திர விரோதப் போக்கை கண்டித்தும், திரு. உமாசங்கர் ஐ.ஏ.எஸ் பணியிடை நீக்கத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் பாராளுமன்றம் உள்ளிட்ட பல இடங்களிலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் வால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதை திரு. ஜீவன்குமார் நினைவு கூர்ந்த அதே வேளையில், அதற்கான வேலைகளை சிறப்பாக செய்த தூத்துக்குடி மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் திரு. செல்வம் அவர்களையும் பாராட்டினார். மேலும் திரு. உமாசங்கர் அவர்களின் பணியிடைநீக்கம் அரசியலமைப்பு விதிகளுக்கு முரணானது என்பதை பாராளுமன்றத்தில் வலியுறுத்தும் விதமாக, திரு. ஜீவன்குமார், திரு. செல்லப்பன் மற்றும் திரு. மணிவண்ணன் உள்ளிட்ட குழுவினர் பகுஜன் சமாஜ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. பிரமோத் குரில் அவர்களை டெல்லியில் நேராக சந்தித்ததும் ஆலோசனைக்கூட்டத்தில் நினைவுறுத்தப்பட்டது. மேலும் ஆதிதிராவிட நலத்துறை என்ற பெயரை பட்டியல் இனமக்களின் நலத்துறை என்று மாற்றக்கோரி பகுஜன் சமாஜ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. பிரமோத் குரில் அவர்கள் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தின் நகலும் ஆலோசனைக்கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து "ஆளும் வர்க்கம்" பற்றியும், அதன் சிறப்பம்சங்கள் எப்படி தேவேந்திர மக்களுக்கு பொருந்தியுள்ளது என்பது பற்றியும் திரு. இ.பா.ஜீவன்குமார் அவர்கள் விளக்கியது கல்வியாளர்களின் புருவங்களையும் ஆச்சரியத்தில் விரியச் செய்தது.
திரு. நாகராஜன் அவர்கள் தேவேந்திர அறிவுசார் குழுமத்தின் வரவு மற்றும் செலவுகளுக்கான நிதிநிலை அறிக்கையை சமர்பித்து விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து தேவேந்திர அறிவுசார் குழுமத்தின் இயக்குனரான திரு. தங்கராஜ் அவர்கள் தெளிவான, தேவையான நீண்டதொரு உரையை நிகழ்த்தினார். தொடர்ந்து தேவேந்திர அறிவுசார் குழுமத்தின் தலைவர் திரு. சீனிவாசன் மற்றும் திரு. செல்லப்பன் ஆகியோர் உரை ஆற்றினர். அடுத்தபடியாக, தேவேந்திர முன்னேற்ற முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் திரு. அரங்கராஜன் அவர்கள் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டியும், நிர்வாகிகள் நியமிக்க வேண்டியதைப் பற்றியும் விளக்கினார். மேலும் ஆலோசனக் கூட்டத்தில் கலந்து கொண்ட கல்வியாளர்களும், அரசு ஊழியர்களும், தொழிலதிபர்களும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யும் பொருட்டு, ஒவ்வொருக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
ஆலோசனைக் கூட்டத்தின் முக்கிய நிகழ்வுகளின் ஒரு பகுதியாக தேவேந்திர முன்னேற்ற முன்னனிக்கு என்று தலைமை அலுவலகம் ஏறத்தாழ 50-65 லட்சம் மதிப்பீட்டில் திருச்சியில் கட்டப்படும் என்ற அறிவிப்பும், தேவேந்திர முன்னேற்ற முன்னணிக்கு என்று செல்வி. உதயா செல்வி அவர்களின் http://deeddmm.webnode.com/ மற்றும் திரு. புகழேந்தி அவர்களின் http://devendirarmunnetramunnani.blogspot.com/ என்ற ஆங்கில இணையதளங்களும், மேலூர் க.தனபாலன் அவர்களின் தமிழ் மொழியிலான http://dmm-tn.blogspot.com/ என மொத்தம் மூன்று இணையதளங்கள் (பிளாக்குகள்) அறிமுகம் செய்யப்பட்டது. திரு. தனக்கோடி அவர்களை தலைவராக கொண்டு கட்டப்படும் இந்த தலைமை அலுவலகத்தின் அமைப்புகளையும், அதில் உள்ள வசதிகளையும் திரு. புகழேந்தி அவர்கள் தெளிவாக விளக்கினார்.
தேவேந்திர அரசு ஊழியர்கள் சமுதாயத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள தேவேந்திர மக்களின் குழந்தைகளுக்கு கல்வி அளிப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு அவர்களை தத்தெடுக்க வேண்டும் என்ற திரு. காந்தி அவர்களைத் தொடர்ந்து, மாவட்டம் தோறும் தேவேந்திர மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டியும், அதற்கான பணிகளை தேவேந்திர இளைஞர்களுக்கு அளிப்பதன் மூலம் அவர்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை தூத்துக்குடியின் திரு. திருஞானம் அவர்கள் வைத்தார்கள். மேலும் தேவேந்திர மக்களின் நிகழ்வுகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாக தொலைக்காட்சி ஒன்று தொடங்கப்படவேண்டும் என்ற வேண்டுகோளும் வைக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கல்வியாளர்கள் திரு.பெரியசாமி, மருத்துவர் திரு. காந்தி, பகுஜன் சமாஜ் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் திரு.தவமணி, தூத்துக்குடி மாவட்டத் தலைவர் திரு.செல்வம் மற்றும் அலுவலகச் செயலாளர் திரு. லூயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
"தேசத்தின் தலையெழுத்து வகுப்பறையின் நான்கு சுவற்றிற்குள் தான் தீர்மானிக்கப்படுகிறது" - பேராசிரியர் ஈ.ஸ். கோத்தாரி அவர்களின் தலைமையிலானை இந்திய கல்விக் குழுவின் 700 பக்க அறிக்கை இப்படித் தான் துவங்குகிறது. இந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்க வல்ல கல்வி நிச்சயம் நம் இனத்தின் தலையெழுத்தையும் தீர்மானிக்கும் வல்லமை உடையது என்பதில் எவரும் எள் முனையளவு கூட மாற்றுக் கருத்து கொள்ள முடியாது. ஒருவனின் அளிக்கப்படும் கல்வி என்பது அவனின் அடுத்ததடுத்த தலைமுறைக்கு அளிக்கப்படும் கல்விக்கு சமம். அதனால் தான் அண்ணல் அம்பேத்கரும் "விடுதலைக்கு முதற்படி அறிவு; அறிவே செயலின் தொடக்கம்; அந்த அறிவிக்கு அடிப்படை க்ல்வி" என்ற உண்மையை அறிந்திருந்த காரணத்தினால் தான் ஒடுக்கப்பட்ட மக்களில் சிந்த்னையாளர்களை உருவாக்கும் பொருட்டு மராத்வாடா பகுதியில் ஒரு கல்விக் கழகத்தை நிறுவவும் முயன்றார். அப்படி மகத்துவம் வாய்ந்த கல்வி அறிவு என்பது அனைத்து இளைய தேவேந்திர மக்களும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது ஒவ்வொரு தேவெந்திர கல்வியாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் தொழில்முனைவோர்களின் கடமையாகும்.
அரசாங்க இயந்திரம் என்பது அரசு, நிர்வாகம், மற்றும் நீதி துறைகளின் என்ற அடிப்படையிலே இயங்குகிறது. மக்களுக்கான திட்டங்களையும், சட்டங்களையும் அரசு துறை தீட்டுகிறது என்றால, தீட்டப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் நிர்வாகத்துறையும், ம்க்களுக்கான அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதற்கு நீதித்துறையும் தத்தமது பணிகளை செய்து வருகின்றன. இந்நிலையில், அரசியல் அனாதைகளாக ஆக்கப்பட்டு, வெறும் வாக்களிக்கும் இயந்திரமாக மாற்றப்பட்ட வெகு ஜன மக்களான எம் இனமக்களுக்கு அரசியல் தீர்வை அடைவதற்கான வழிவகைகளை ஆராய்வதோடு நில்லாமல், நிர்வாகத் துறையிலும் தேவேந்திர மக்களின் நேரிடையான பங்களிப்பிற்கு வித்திட வேண்டியதும் அவசியமாகிறது. கன்ஷிராம் ஜி அவர்களின் பாம்செப் என்ற ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட அரசு ஊழியர்களின் அமைப்பு தான் பின்னாளில் பகுஜன் சமாஜ் கட்சியாக வளர்ந்து இன்று இந்தியாவின் பெரிய மாநிலமான உத்திரபிரதேசத்தை ஆண்டு கொண்டிருக்கிறது. நிர்வாகத்துறையின் அங்கமான காவல்துறையின் ஈ.எ.ட-யாக பொன்.பரமகுரு என்ற தேவர் இருந்ததன் காரணமாகவே, 400க்கும் மேற்பட்ட பரமகுருவின் சாதியைச் சேர்ந்தவர்கள் உதவி காவல் ஆய்வாளர்கள் ஆனார்கள் என்பது கடந்த காலம் நமக்கு காட்டும் உண்மை.
என்ன தான் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி நமக்கான சட்டங்களை நாமே இயற்றினாலும், அதை செயல்படுத்துவதற்கான பொறுப்பு நிர்வாகத்துறையிடமே உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த நிர்வாகத்துறையில் இடம் பெறுவதற்கு கல்வி அறிவு என்பது அவசியமாகிறது. சிறுபான்மை சமுதாயங்களைச் சேர்ந்த செட்டியார்களுக்கும், பார்பனியர்களுக்கும் தனித்தனியாக பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன என்பதும், சமுதாயத்தில் காமராசர் காலத்திற்கு முன்பு வரை கடை நிலை சமுதாயமாக இருந்த நாடார்களுக்கு கூட அவர்களுக்கென தனியாக கல்வி நிறுவனங்கள் இருக்கிறது என்பதும் தேவேந்திர கல்வியாளர்களும், அரசுத்துறையைச் சார்ந்தோரும் மற்றும் தொழில் முனைவோர்களும் சிந்திக்க வேண்டியதாகும். மேலும், ஒவ்வொரு தேவேந்திர இளைய தலைமுறையும் கல்வி பெறுவதை நிதி உதவி அளித்தோ அல்லது இன்ன பிற உதவிகள் அளித்தோ உறுதி செய்ய வேண்டியது தேவேந்திர கல்வியாளர்கள், அரசுத்துறையைச் சார்ந்தோர் மற்றும் தொழில் முனைவோர்கள் முன் உள்ள கடமையாகும். தேவேந்திர கல்வியாளர்கள் தாம் பெற்ற கல்வியறிவின் மூலம் கடைக்கோடி தேவேந்திரனையும் சென்றடையலாம். அரசுத் துறையைச் சேர்ந்த தேவேந்திரர்கள் அரசின் திட்டங்கள் அனைத்து தேவேந்திர மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு அவர்களுக்கு அரசு ரீதியான உதவிகளை செய்வதோடு நில்லாமல், விரைந்து செய்து கொடுக்க வேண்டும். திட்டங்களைப் பெறுவதில் தாமதமோ, கவனிக்க வேண்டி கட்டாயமோ காட்டக் கூடாது. தேவேந்திர தொழில் முனைவோர்கள் வறுமை நிலையில் உள்ள தேவேந்திர குழந்தைகளை தத்தெடுத்து கல்விக்கான நிதி உதவியை அளிக்கலாம்.
வெந்ததைத் தின்று, வந்த வேலையைச் செய்து, வாழ்க்கையை ஓட்டி, பாரதி சொன்ன "வேடிக்கை மனிதரைப்" போல் இனியும் எம் இன மக்கள் இருத்தல் ஆகாது. ஆகவே நம் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது இன்றைய என்பது காலக் கட்டத்தின் கட்டாயமும் ஆகிறது. அவ்வாறு கல்வி அளிப்பதன் மூலமும், அறிவுப் புரட்சி ஏற்படுத்துவதன் மூலமும் அரசாங்கத்தின் மூன்று தூண்களான அரசு, நிர்வாகம் மற்றும் நீதி ஆகியவற்றின் மொத்தத்தையும் கைப்பற்றலாம். கைப்பற்றுவோமா?
தேவேந்திரர் முன்னேற்ற முன்னணி All Rights Reserved. Free Blogger Templates created by Deluxe Templates
Wordpress Theme by Skinpress | Entertainment Show One Tree Hill on Watch One Tree Hill Online and TV Shows.